விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த புனித இராயப்பர் முன்பள்ளி கட்டடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து முன்பள்ளி கட்டடத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.

அத்துடன் தர்மபுரம் பங்கில் பணிபுரியும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் பணித்தள மடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெற்றது. மடத்திற்கான அடிக்கல்லை யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்கள் நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம், முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அருட்சகோதரி டெக்லா மேரி, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin