தேசிய திருவழிபாட்டு மாநாடு வருகின்ற புரட்டாதி மாதம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஆயத்தங்கள் மறைமாவட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ரீதியாக நடைபெறும் இவ் ஆயத்த செயலமர்வுகள் கடந்த 10ஆம் 13ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்டங்களில் நடைபெற்றன.
10ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் பேராலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்கள் கலந்து நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள் என்னும் தலைப்பிலும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்கள் நற்கருணை ஓரு கொண்டாட்டம் என்னும் தலைப்பிலும் கருத்துரைகள் வழங்கினர்.
தொடர்ந்து கலந்துரையாடலும் மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் தெரிவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், யாழ். மறைக்கோட்ட பங்குகளின் பிரதிநிதிகளென 65 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன் 13ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் இணைப்பாளர் அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்கள் கலந்து நற்கருணை ஓரு கொண்டாட்டம் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
கருத்துரையை தொடர்ந்து கலந்துரையாடலும் மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் தெரிவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளின் பிரதிநிதிகளென 50 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வுகளில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்கள் கலந்து திருவழிபாட்டு ஒழுங்குமுறைகள் தொடர்பாகவும் செப்ரெம்பர் மாதம் கண்டி மறைமாவட்டத்தில் நடைபெறவுள்ள தோசிய திருவழிபாட்டு மாநாடு மற்றும் மே மாதம் யாழ். மறைமாவட்டத்தில் நடைபெறவுள்ள மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு, அதற்கான ஆயத்த செயற்பாடுகள் தொடர்பான விளக்க உரையையும் வழங்கியிருந்தார்.
