சுவாமி ஞானப்பிரகாசியார் அடிகளாரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் முகமாக தனிநாயக தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மறைமாவட்ட மற்றும் அமலமரித்தியாகிகள் சபை குருக்களுக்கான கூட்டம் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை சங்க இணைத்தலைவர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் யாழ். புனித மரியன்னை பேராலய பங்கு பணிமனையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்களின் பிறப்பின் 150வது ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள சிறப்பு நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்போது 150 ஆண்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வு பேரணியுடன் வருகின்ற மாதம் 13ஆம் திகதி அச்சுவேலியில் நடாத்த தீர்மானிக்கப்பட்டதுடன் பொறுப்புக்களும் வழங்கிவைக்கப்ட்டன.
இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ்ப்பாண தமிழ்ச்சங்க பெருந்தலைவர் பேராசிரியர் சண்முகதாஸ், சங்க தலைவர் பேராசிரியர் வேல்நம்பி, சங்க பொதுச்செயலாளர் திரு. சந்திரமௌலீசன் லலீசன், பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி. ரமேஸ் மற்றும் அருட்தந்தை ஜெயசேகரம், அருட்தந்தை பிலேந்திரன், அமலமரித்தியாகிகள் சபை நலநோம்பு நிலைய இயக்குநர் அருட்தந்தை அன்புராசா, திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோண்சன் ராஜ்குமார், அமலமரித்தியாகிகள் சபையின் சமதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்னம், யாழ். மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
1901ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்கள் தமிழுக்கும் மறைக்கும் அளப்பரிய பங்காற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், சிங்களம், இலத்தீன், பிரெஞ்ச் உள்ளிட்ட 72 மொழிகளில் புலமைவாய்ந்த இவர் 50க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றி 30க்கும் அதிகமான நூல்களை அச்சேற்றியுள்ளார்.
நல்லூரை தளமாகக்கொண்டு எளிமையான சன்னியாச வாழ்வை இவர் வாழ்ந்தமையாலும் மெய்யியல் ரீதியான இந்து மதத்தினையும் அதன் பாரம்பரியத்தையும் அறிந்திருந்தமையாலும் இவரது கருத்துக்களும் இவரது வாழ்க்கை முறைமையும் அதிகமாக இந்து சமய மக்களால் விரும்பப்பட்ட பின்னணியில் இவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எனவும் அழைக்கப்படுகின்றார்.
இவரது பணியை கௌரவித்து ஜேர்மன் நாட்டில் 1939ஆம் ஆண்டு அஞ்சல் நினைவு முத்திரையும் தொடர்ந்து இலங்கை அரசினால் 1981 வைகாசி மாதம் 22ஆம் திகதி அவரது படத்துடன் கூடிய அஞ்சல் நினைவு முத்திரையும் சிறப்பு முதல் நாள் உறையும் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.