தேசிய திருவழிபாட்டு மாநாடு வருகின்ற புரட்டாதி மாதம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஆயத்தங்கள் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ரீதியாக நடைபெறும் இவ் ஆயத்த செயலமர்வுகள் கடந்த 29ஆம் திகதி இளவாலை மற்றும் பருத்தித்துறை மறைக்கோட்டங்களில் நடைபெற்றன.
இளவாலை மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்ற செயலமர்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவா போல் அவர்கள் கலந்து நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள், நற்கருணை ஒரு கொண்டாட்டம் என்னும் தலைப்புக்களில் உரைகள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து கலந்துரையாடலும் மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் தெரிவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இளவாலை மறைக்கோட்ட பங்கு பிரதிநிதிகளென 110 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன் புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் பருத்தித்துறை மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை அருள்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் செபமாலைதாசர் சபை மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயசீலன் அவர்கள் கலந்து நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள், நற்கருணை ஓரு கொண்டாட்டம் என்னும் தலைப்புக்களில் உரைகள் நிகழ்த்தினார்.
கருத்துரையை தொடர்ந்து கலந்துரையாடலும் மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் தெரிவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் 65ற்கும் அதிகமான பருத்தித்துறை மறைக்கோட்ட பங்கு பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.