அளம்பில் பங்கின் நாயாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த புனித சூசையப்பர் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ஆலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 04ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பொஞ்சியன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

புதிய ஆலயத்திற்கான அடிக்கல் முன்னைநாள் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களால் கடந்த வருடம் ஜப்பசி மாதம் 25ஆம் திகதி நாட்டப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin