மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வங்காலையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
அருட்தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பியோ தர்சன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அருட்தந்தையுடன் கொல்லப்பட்டவர்களின் நினைவாக சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பிக்குமுகமாக பஸ்ரியன் சமூக முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.

By admin