மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடி மாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் திருவிழாவின்போது மடுத்திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதாரம், மருத்துவம், குடிநீர், போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினரென பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆடி மாதம் 02ஆம் திகதி காலை 6:15 மணிக்கு திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளதுடன் திருநாள் திருப்பலியை மறைமாவட்ட ஆயர்கள்
இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

இம்முறை மருதமடு அன்னைக்கு முடிசூட்டிய நூற்றாண்டு விழாவாக இவ்விழா அமைந்துள்ளமையால் பல இலட்சக்கணக்கான மக்கள் இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுவதுடன் இதற்கான ஆயத்த நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

By admin