மருதமடு அன்னை யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்ட மக்களை மட்டுமல்ல, பிரித்தானியாவில் வாழும் உங்கள் வீதிகளிலும் வலம்வந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சந்திக்கின்றாரென பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல திருநாள் திருப்பலியில் மறையுரையாற்றிய யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் பிரசித்தி பெற்ற மரியன்னையின் திருத்தலமாகிய வோல்சிங்கம் மாதா திருத்தல திருநாள் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.

இத்திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்து ஆற்றிய மறையுரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த குருமுதல்வர் அவர்கள், யாழ்ப்பாணம் மன்னார் மறைமாவட்டங்களில் மருதமடு அன்னை பயணம் செய்தபொழுது ஆன்மீக ரீதியாக இணையத்தளங்கள் வழியாகவும் ஜெபங்கள் வழியாகவும் இணைந்திருந்த பிரித்தானியா தமிழ் மக்களுக்கு நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.அத்துடன் மருதமடு அன்னை உங்களையும் உங்கள் வீதிகளில் வலம்வந்து சந்திக்கின்றார் எனும் விசுவாச உண்மையையும் அவர்களுக்கு உணர்த்தி, மருதமடு அன்னைதான் வோல்சிங்கம் அன்னையாக இப்பதியில் வீற்றிருந்து அற்புதங்கள் புரிகின்றார் என்பதையும் ஞாபகப்படுத்தினார்.

மன்னர் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை லக்ஸ்ரன் அவர்களும்இவ்விழாவில் இணைந்துகொண்டதுடன் பிரித்தானியாவின் எல்லா பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து மத மக்கள் ஒன்றுகூடி விழாவில் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin